குளக்கரை விடியல்!
இத்தனைபேர் சுற்றிவர அத்தனை அழகா நான்!? மீசை முறுக்குது ஆசைச்சூரியன்... சூரியக்கதிர் வருடச் செவ்விதழ் விரித்தது தண்ணீர் குளத்துத் தாமரை... தாமரை இதழ்விரியத் தன் முகம் புதைத்தது நிலவுக்கு ஏங்கிடும் அல்லி... அல்லிக் குளத்தினில் வெள்ளிச் சிதறல்கள், துள்ளித் திரியும் மீன்கள்... மீன்களைப் பார்த்ததும் மோகம் பெருகிட மோனத் தவமியற்றும் கொக்கு... கொக்கிற்குப் போட்டியாய் குளக்கரையில் தவமிருக்கும், ஒற்றைக்கால் அரசமரம்... அரசமரத்தடியில் அசையா நெடுந்தவம், அன்னையைப்போல் பெண்தேடும் பிள்ளை!